
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை அநாகரீகமாகப் பேசியதற்காக தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவிற்கு அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெகவின் முதல் பொதுக்குழு அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகதான் திரைமறைவில் அண்ணாமலை உருவாக்கியதாகவும், அவருக்கு போராட்டம்கூட நடத்தத் தெரியவில்லை என்றும் விமர்சித்துப் பேசினார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரும், பிரபல தொழிலதிபர் மார்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் நேற்று (மார்ச் 31) இரவு வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,
`தமிழக மக்களின் நலனுக்காக ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய ஆதவ் அர்ஜுனாவிற்கு எனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.
அவரது மாமனார், அதாவது என் தந்தையின் பணத்தை தவறாக உபயோகித்து எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலில் ஆதவ் அர்ஜுனா ஈடுபடுகிறார் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும், தனது அரசியல் மற்றும் பணப் பேராசையை பூர்த்தி செய்வதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்தும், பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்தும் தேவையற்ற பல பிரச்னைகளை அவர் உருவாக்குகிறார்.
இந்த முட்டாள்தனத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை இந்த வாய்ப்பின் மூலம் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். அவரது செயலால் மேலும் ஏதாவது விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்கத் தேவையான அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுப்பேன்’ என்றார்.