சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!

இந்த கடத்தல் சம்பவத்தில் அவர் மூளையாக செயல்பட்டுள்ளார். காவல்துறை விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
பூவை ஜெகன்மூர்த்தி - கோப்புப்படம்
பூவை ஜெகன்மூர்த்தி - கோப்புப்படம்
2 min read

சிறுவன் கடத்தல் வழக்கில் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் என்கிற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்துப் பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணம் குறித்து தெரிய வந்ததும், தனுஷ் வீட்டுக்கு விஜயஸ்ரீ குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரனான சிறுவனை அவர்கள் கடத்திச் சென்று, பின்னர் பேருந்து நிறுத்தம் ஒன்றில் அவனை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக தனுஷின் தாயார் லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது திருவலாங்காடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், இதில் தொடர்புடைய ஏடிஜிபி ஜெயராம் மற்றும் பூவை ஜெகன்மூர்த்தியை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெகன்மூர்த்திக்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி வேல்முருகன், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவிட்டார். மேலும், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரிக்க நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அவரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணைக்குப் பிறகு விடுவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏடிஜிபி தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன் ஜாமின் வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டு, பணியிடை நீக்க நடவடிக்கையில் தலையிட முடியாது என்று தெரிவித்தது.

இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று (ஜூன் 27) நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை வந்தது.

அப்போது ஜெகன்மூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், தனது கட்சிக்காரருக்கும் கடத்தல் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து, `காவல்துறை முன்பு பூவை ஜெகன்மூர்த்தி அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது. இந்த கடத்தில் சம்பவத்தில் அவர் மூளையாக செயல்பட்டுள்ளார். காவல்துறை விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. முன் ஜாமின் வழங்கும் பட்சத்தில் அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார்’ என்று வாதங்கள் முன்வைத்தார்.

இறுதியில், பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in