பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியைத் தடுப்பது நியாயமற்ற செயல்: சீமான்

அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகளுக்கும், சிந்து நதியை முடக்கி மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க முயலும் இந்திய அரசின் செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்?
பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியைத் தடுப்பது நியாயமற்ற செயல்: சீமான்
ANI
1 min read

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், சிந்து நதியைத் தடுக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிகை வைத்துள்ளார்.

சிந்து நதி நீர் தொடர்பாக சீமான் இன்று (ஏப்.26) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

`காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்தியாவை ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிந்து நதியைத் தடுத்து நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது சிறிதும் நியாயமற்றச் செயலாகும்.

சுற்றுலா சென்ற இந்திய மக்களைக் கொன்றது பயரங்கவாதிகள்தானே தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் இல்லை. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான கொடுந்தாக்குதலுக்குக் குறிப்பிட்ட ஒரு மதத்தின் மீது பழிபோடுவதோ, குறிப்பிட்ட மக்களை பலிகொடுப்பதோ ஒருபோதும் அறமாகாது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறையின் படுதோல்வியால் நிகழ்ந்த கொடுநிகழ்வாகும். பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்க, மறக்கடிக்க, சிந்து நதியைத் தடுப்பதென்பது, மக்களின் உணர்வுகளைத் தூண்டி திசை திருப்பும் செயல்.

பாஜக அரசிற்கு உண்மையிலேயே பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அதற்கு உதவியர்களையும் தண்டிக்க வேண்டும். அவற்றை விடுத்து 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடிநீரை, அவர்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் விவசாய பாசன நீரைத் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்?

சிந்து நதியால் அதிகம் பயன்பெறுவது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வாழும் சீக்கிய மக்களும்தான். அவர்கள் அனைவரும் எல்லை பிரிப்புவரை இந்த நாட்டின் குடிகளாக இருந்தவர்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உயர்ந்த நோக்கங்களோ, உன்னத லட்சியங்களோ இல்லாது கண்மூடித்தனமாகச் அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், சிந்து நதியை முடக்கி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க முயலும் இந்திய பாஜக அரசின் செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

பாகிஸ்தானுடன் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் இந்திய அரசு, இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இத்தனை படுகொலைகள் செய்த பிறகும் இலங்கை நட்பு நாடாக இருப்பதற்கு காரணம் கொன்றது சிங்களவர், கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால்தானே?

மனிதனின் தீராத பாவங்கள் எல்லாம் கங்கை நதியில் மூழ்கினால் தீரும் என்று நம்புகின்ற நாடு, நதிநீரை தடுத்து கோடிக்கணக்கான மக்களை கடுமையாக தண்டிப்பது முறைதானா? என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in