பாஜக தங்களை மிரட்டியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதில் அவர் பேசியதாவது:
“அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு பாஜக சார்பில் எங்களுக்கு நிறைய நிர்பந்தம் வைக்கப்பட்டது. எங்களுடைய வங்கிக் கணக்குகளை முடக்கினர். எங்களை பயமுறுத்தினார்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அம்மாவை போல் நானும் துணிச்சலாக முடிவெடுத்து அதிமுகவில் இணைந்தேன்” என்றார்.