
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நேடியாக நியமன உறுப்பினர்களாக்கும் சட்டதிருத்த மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான உள்ளாட்சி அமைப்புகளிலும், நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்று கடந்த மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்.16 அன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் தேர்வு செய்யப்படுவதற்கான புதிய சட்ட மசோதாக்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
`12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும். கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்கள் வாழும் ஊரில் மரியாதை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் நேரடியாகத் தேர்தலில் போட்டியிடாமல், நியமன முறையில் உறுப்பினர்கள் ஆக்கப்படுவார்கள்.
இது மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்த சட்ட மசோதாக்கள் வழிவகுக்கும்’ என்றார்.
2025-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்ட மசோதா மற்றும் 2025-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்ட மசோதா ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த சில முக்கிய அம்சங்கள்:
1) கிராம ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி ஒருவரை உறுப்பினராக நியமிக்கும்போது, சம்பந்தப்பட்ட ஊராட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட அந்த நியமனம் இடம் கூடுதல் இடமாக இருக்க வேண்டும்.
2) நியமன உறுப்பினருக்கான உரிய தகுதிகளை மாற்றுத்திறனாளிகள் பெற்றிருக்க வேண்டும்.
3) ஊராட்சிகளின் பதவிக்கால அளவுடன், நியமன உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவேண்டும்.
4) நியமன உறுப்பினருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.
5) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, மாமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 100-க்கு அதிகமாகும்போது, இரு மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படவேண்டும்.
இந்நிலையில், இந்த இரு சட்ட திருத்த மசோதாக்களும் இன்று (ஏப்.29) தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறின.