
`தமிழ்நாட்டில் பொது அமைதியை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முளையிலேயே கிள்ளி எறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என இன்று (அக்.19) காலை தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் உரையாற்றினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் இன்று காலை தொடங்கிய தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் / படைத்தலைவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியவை பினவருமாறு:
`இன்றைக்கு சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்னையாக இருக்கின்றன. அவற்றின் மூலம் பொது அமைதிக்கு பங்கம் வரும் செயல்களை நாம் பார்க்கமுடிகிறது. தமிழ்நாட்டிலேயே அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பல மாநிலங்களில் இருந்து வதந்திகளை பரப்பக்கூடியவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தமிழ்நாடு அமைதியான மாநிலம் அங்கே அமைதியின்மையை உருவாக்க ஏதாவது பரப்புவீர்களா என்று யூடியூபர் ஒருவரை கடுமையாக சாடியிருந்தார்.
ஆகவே சமூக வலைதளங்களில் வரக்கூடிய வதந்திகளை பற்றி நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அதற்கான ஆலோசனைகளை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.
குறிப்பாக போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்றவாளி கும்பல்கள், கணிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைக்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உறுதிபடுத்தும் வகையில் மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொறுப்பை தமிழ்நாடு காவல்துறையானது ஏற்றிருக்கிறது.
அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் சட்ட ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து நம் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் கடமையாற்றுவோம் ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்’ என்றார்.