உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தேர்தல் பிரசாரத்திலிருந்து குஷ்பு விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குஷ்பு கூறியதாவது:
“நன்றியுடனும், சோகத்துடனும் இந்த கடிதம் மூலம் உங்களை அணுகிறேன். வாழ்க்கை என்பது கணிக்க முடியாத ஒன்று. நாம் நன்றாக இருப்பதாக உணரும்போது சில சிரமங்கள் ஏற்படுகிறது.
2019- ல் தில்லியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் எனக்கு வால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்த காயத்தால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவதிப்படுகிறேன். இதற்கான சிகிச்சை எடுத்து கொண்டாலும் குணமடையாத நிலையில் இருக்கிறேன்.
இத்தகைய சூழலில் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பிரசாரம் செய்தால் உடல்நிலை இன்னும் மோசமாகும் எனவும் எச்சரித்தனர். ஆனால், பிரதமர் மோடியை பின்பற்றும் ஒரு நபராக, வலிகள் இருந்தாலும் அதனை மறந்து என்னால் முடிந்தவரை பிரசாரம் செய்தேன். ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது.
இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான இந்த நேரத்தில் கட்சிக்கு என்னால் பங்களிப்பு அளிக்க முடியவில்லை என்பதால் வருத்தமாக உள்ளது.
இருப்பினும் இணையம் மூலம் பிரசாரத்தின் ஒருபகுதியாக நான் தொடர்ந்து பங்களிப்பேன். நான் குணமடைந்து விரைவில் திரும்பி வருவேன். மேலும் நம் பிரதமர் தொடர்ந்து 3- வது முறையாக பதவியேற்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.