கரூர் சம்பவத்தில் துறை வாரியான பதில்களை விரைந்து தருக: முதல்வருக்கு பாஜக எம்.பிக்கள் குழு கடிதம் | Karur Stampede |

சூழ்நிலைக்கு முழுப் பொறுப்பேற்று, விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
கரூர் சம்பவத்தில் துறை வாரியான பதில்களை விரைந்து தருக: முதல்வருக்கு பாஜக எம்.பிக்கள் குழு கடிதம் | Karur Stampede |
1 min read

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து துறை வாரியான விரிவான பதில்களை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக எம்.பி அனுராக் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய நடிகையும் எம்.பியுமான ஹேமா மாலினி தலைமையில் 8 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை, மத்திய பாஜக அமைத்தது. அதன்படி கடந்த செப்டம்பர் 30 அன்று கரூர் வந்த குழுவினர் கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு காயமடைந்து மருத்துவமனையில் இருந்தவர்களையும் உயிரிழந்தோர் குடும்பத்தினரையும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதையடுத்து, பாஜகவின் குழுவில் இடம்பெற்ற பாஜக எம்.பி அனுராக் தாகூர் முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“கரூரில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையுடனும் வேதனையுடனும் நான் எழுதுகிறேன். இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக 8 பேர் கொண்ட குழு, துயரச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது. மக்கள் மிகுந்த வேதனையில் உள்ள மக்கள் மனதில் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஏற்படக் காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் என்ன என்ற கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுமையாகப் பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:

1. சம்பவத்திற்கான முதன்மை காரணங்கள்: கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன?

2. கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள்: நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் அரசு மற்றும் காவல்துறை தரப்பில் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

3. காரண பகுப்பாய்வு: கூட்ட நெரிசலைத் தவிர்க்க பல்வேறு வழிகள் இருந்தபோது எந்த இடத்தில் தவறு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணை கூறுகிறது?

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரையறுக்கப்பட்டுள்ளதா?

மேலும், முழுமையான விவரங்கள் பொதுமக்களுக்கும் வெளியிடப்பட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக வந்த குழுவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு, கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியருக்கு ஒரு நகலுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருடன் பகிர்ந்து கொண்ட கடிதம் உங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொதுமக்களின் கேள்விகளுக்கு தீர்வு காணும் வகையில், துறை வாரியாக விரிவான பதில்களைக் இக்கடிதம் கோருகிறது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in