
தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் புதிய உறுப்பினராக கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2013-ல், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், இதை பின்பற்றும் ஒவ்வொரு மாநிலமும், உணவு ஆணையத்தை அமைக்கவேண்டும்.
உணவுப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதும், உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதும், சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீறப்படுவது தொடர்பான புகார்களை விசாரிப்பதும், உணவு ஆணையத்தின் பணிகளாகும்.
கடந்த 2018-ல் ஐஏஎஸ் அதிகாரி ஆர். வாசுகி தலைமையில் முதல்முறையாக மாநில உணவு ஆணையம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாநில உணவு ஆணையத்தின் புதிய தலைவராக திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனும், புதிய உறுப்பினர்களாக கே.எம். மதுபாலா, எம். கணேசன், கே. கருணாநிதி, எஸ். பெரியாண்டவர் மற்றும் அன்னபூர்ணா டி. சீனிவாசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்.15 அன்று, உணவு ஆணையத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடந்தாண்டு கோவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் வைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து கேள்வியெழுப்பியதும், பிறகு அதற்கு மன்னிப்புக் கோரியதும் சர்ச்சையானது.