

என் மீதான அவதூறு வழக்கில் டி.ஆர். பாலு ஆஜரானால் அவரிடம் குறுக்கு விசாரணை செய்ய கேள்விகளைத் தயாராக வைத்திருக்கிறேன் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் பாஜக விவசாய அணியினரின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் 19 அன்று கோவைக்கு வருகிறார். இங்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகளைச் சந்திக்கிறார்.
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கோவையில் அனைத்து மாநில வேளாண் அமைச்சர்களையும் கூட்டி, பருத்தி உறுபத்தித் திறனை அதிகரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளார். அதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வேறு எந்த நிகழ்ச்சிக்காகவும் அவர் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பாஜக சார்ந்த கட்சி நிகழ்ச்சிகள் அப்போது நடத்தப்படவில்லை. விவசாயிகளுக்காக மட்டுமே மூன்று மணி நேரத்தை ஒதுக்கி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். ஐயா நம்மாழ்வாரின் பெயரில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
தில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவில் முதன்முறையாக படித்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குஜராத்தில் கோயில் பிரசாதத்தில் ரைசின் என்ற விஷத்தைக் கலக்க திட்டம் தீட்டிய மருத்துவர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். அதேபோல், குஜராத், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, தில்லி, உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் மருத்துவர் குழு இதில் சம்பந்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், மருத்துவர்களை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். மக்கள் மரியாதை வைப்பார்கள். அதனால்தான் அந்த தோற்றத்தில் வந்தோம். மும்பையில் நடந்தது போல் தில்லியில் குண்டு வெடிப்பை நடத்த வேண்டும் என்பதே அவர்களது திட்டமாக இருந்திருக்கிறது. இது மிகவும் அபாயகரமானது. கட்சி வேறுபாடு இன்றி இதை அனைவரும் கண்டிக்க வேண்டும். மதங்களின் பெயரால் பயங்கரவாதம் வேண்டாம். நாட்டுக்குள் உருவாகும் பயங்கரவாதம் நமக்கு வேண்டாம்.
அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொஞ்ச நேரத்தில் டிஆர் பாலுவை விமான நிலையத்தில் பார்த்தேன். அப்போது உடல் நிலை சரியில்லாதது போல் தெரியவில்லை. பிறகு அடுத்தநாள் காலையில் அவர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்துப் போராட்டம் செய்த படம் வெளியானது. அடுத்தமுறை நான் நீதிபதியிடம் உங்களையே ஏமாற்றிவிட்டார்களே என்று சொல்லப்போகிறேன். டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்துள்ளார்கள். அடுத்தமுறை அவர் ஆஜரானால் நான் அவரிடம் கேட்பதற்குக் கேள்விகளை வைத்துள்ளேன். அவரிடம் கேட்ட பிறகு அவற்றை வெளியிடுவேன்” என்றார்.
Former BJP president Annamalai has stated that he has prepared questions to cross-examine T.R. Baalu if he appears in the defamation case filed against him.