காலணி அணிந்துகொண்ட அண்ணாமலை!

நயினார் நாகேந்திரன், எல். முருகன் ஆகியோரது வேண்டுகோளுக்கு இணங்க மேடையிலேயே...
காலணி அணிந்துகொண்ட அண்ணாமலை!
https://x.com/DDTamilNews
1 min read

ஆட்சியிலிருந்து திமுகவை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று கூறிய அண்ணாமலை, நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளை ஏற்று காலணியை அணிந்துகொண்டார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த டிச.23-ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த டிசம்பரில் செய்தியாளர்களைச் சந்தித்த அப்போதைய பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, "திமுக என்ற கட்சியை தமிழகத்தின் ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் காலணி அணியப் போவதில்லை" என்று சபதம் எடுத்தார். இதன்படி செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் முன்னிலையில் காலணியைக் கழற்றினார் அண்ணாமலை.

இதன்பிறகு தொடர்ச்சியாகக் காலணியை அணியாமலே அண்ணாமலை இயங்கி வந்தார்.

இந்நிலையில், பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொண்ட பிறகு மேடையில் பேசிய நயினார் நாகேந்திரன், "முன்பு 4 தொகுதிளில் வெற்றி பெற்றோம். இனி வரும் தேர்தல்களில் 40 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம்" என்று பேசினார்.

மேலும், தனது பேச்சின் இறுதியில், "அண்ணாமலைக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அண்ணாமலை இனி செருப்பு அணிய வேண்டும். இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் செருப்பு அணிவேன் என்றார். மத்திய உள்துறை அமைச்சரால் நேற்று ஆட்சி மாற்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான நாள், நேரம் குறிக்கப்பட்டது. 2026 மே மாதம் நிச்சயமாக ஆட்சி மாற்றம் உறுதி. அண்ணாமலை இன்றே செருப்பை அணிந்துகொள்ளலாம்" என்று வேண்டுகோளை விடுத்தார் நயினார் நாகேந்திரன்.

இதைத் தொடர்ந்து, மேடையில் வைத்தபடி அண்ணாமலைக்குப் புதிய காலணிகளை வழங்கினார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். நயினார் நாகேந்திரன், எல். முருகன் ஆகியோரது வேண்டுகோளுக்கு இணங்க மேடையிலேயே காலணியை அணியத் தொடங்கினார் அண்ணாமலை.

பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மாநிலத் தலைவர் சொல்வதைக் கேட்பது தங்களுடையக் கடமை என்பதால் அவர் வாங்கிக் கொடுத்த காலணியை அணிந்து கொண்டேன் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in