மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருநாள் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு நாளை வருகை தரவுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டுக்கு நாளை வருகிறார்.
நாளை மதியம் மதுரை விமான நிலையம் வரும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று அங்கு சாலைப் பேரணி மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து, மாலை மதுரையில் நடைபெறும் சாலைப் பேரணியில் பங்கேற்கிறார். இதனிடையே, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
இதன் பிறகு ஏப்ரல் 13-ல் இரண்டு இடங்களில் சாலைப் பேரணி மேற்கொள்கிறார். முதலில், கன்னியாகுமரியில் பேரணி மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து, தென்காசியில் சாலைப் பேரணி நடைபெறுகிறது. இதனிடையே, மதியம் 3 மணிக்கு திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகிறார்.
முன்னதாக ஏப்ரல் 4-ல் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வருவதாக இருந்தது. அந்த பயணம் திடீரென ரத்தான நிலையில் இருநாள் பயணமாகத் தற்போது வருகிறார்.