
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவிற்காக, அவரது மகளும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
நேற்று (ஏப்.10) இரவு சென்னையை வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். கூட்டணி தொடர்பாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் தொடர்பாகவும் கட்சியினருடன் அவர் ஆலோசனை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் சாலிகிராமம் இல்லத்திற்குச் சென்று அவரது தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவருக்கு ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து அமித்ஷாவின் வருகை தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது,
`தேசியவாதியான என் தந்தை இறந்ததும், பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து பதிவு செய்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாமல், பாஜக உங்களுடன் துணை நிற்கிறது என்பதையும் தெரிவித்தார்’ என்றார்.