ஜாஃபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணை: அவகாசம் கோரும் அமீர்

ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்துள்ளார்.
அமீர்
அமீர்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரியிருக்கிறார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் 9-ல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஜாஃபர் சாதிக் நடத்தி வந்த கும்பல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜாஃபர் சாதிக்குக்குத் தமிழ்த் திரைத் துறை மற்றும் பாலிவுட்டில் தொடர்பு இருப்பதாகவும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜாஃபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட மூன்று நபர்கள், ஏப்ரல் 2 அன்று தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு நேற்று சம்மன் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அளித்துள்ள சம்மனை எதிர்கொள்ளத் தயார் என்று இயக்குநர் அமீர் தெரிவித்தார்.

இது குறித்த ஆடியோவில் அவர் பேசியதாவது: “ஜாஃபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனது தரப்பிலிருக்கும் உண்மையையும், நியாயத்தையும் எடுத்து சொல்வேன். இறைவன் அருளால் 100 சதவீதம் வெற்றியோடு திரும்ப வருவேன்” என்றார்.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரியிருக்கிறார் அமீர். ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக என்சிபி-க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in