நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் மறுத்துள்ளது.
Published on

நீட் தேர்வில் விலக்கு பெறுவது தொடர்பாக வரும் ஏப்ரல் 9-ல் தமிழக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 4) முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,

`மருத்துவத்துறையில் நமது நாட்டிற்கே முன்னொடியாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருவதற்கு நம் மாநிலத்தில் பல்லாண்டு காலமாகப் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறையே இந்த சாதனைகளுக்கு அடிப்படை.

2006-ல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து, பள்ளிகளில் 12 ஆண்டுகள் பயிலக்கூடிய பள்ளிக்கல்வி மதிப்பெண்கள் அடிப்படையில் சமூக நீதியும், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு சம வாய்ப்பையும் உறுதி செய்யக்கூடிய முன்னொடி சேர்க்கை முறையை முதல்வர் கலைஞர் உருவாக்கினார்.

இந்த முறையால்தான் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் நீர் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர், இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற இயலாத கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு எட்டாக் கனி ஆகிவிட்டது.

நீட் தேர்வானது பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வசதி படைத்த நகர்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது என்பதிலும், இந்த தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளது என்பதிலும் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமூக சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் உள்ள கருத்தொற்றுமையின் அடிப்படையில் சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் ஓர் உயர் நிலைக்குழுவை இந்த அரசு அமைத்தது.

அந்த குழுவின் அடிப்படையில் இந்த சட்டப்பேரவையில் 13-09-2021 அன்று தமிழ்நாடு மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம், 2021 என்ற சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் ஆளுநர் ஒப்புதல் வழங்கப்படாமல் மறுபரிசீலனை செய்திட திருப்பி அனுப்பப்பட்டது.

08-02-2022 அன்று சட்டமுன்வடிவு மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் மறுத்துள்ளது என்ற வருந்தத்தக்க செய்தியை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும், இந்த பேரவையின் தீர்மானங்களையும் மத்திய அரசு கருத்தில்கொள்ளவில்லை. மத்திய அரசு நமது கோரிக்கையை நிராகரித்திருக்கலாம், ஆனால் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை.

இது தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களுடனும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 9-ம் தேதி அன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. அதில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in