
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக ரூ. 1,963.63 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. இதற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ. 1,963.63 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சூழலியல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிடுங்கப்பட்ட மரங்கள் வேறோர் இடத்தில் நடுவது உள்ளிட்ட பணிகளுக்கும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் இந்தத் திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் இதுவரை அளிக்கப்படவில்லை. எனினும், தாமதத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு முன்கூட்டியே நிதியை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தொடங்கி பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக 13 புதிய மெட்ரோ ரயில் நிலையங்களுடன் மெட்ரோ வழித்தடம் அமையும் வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு ரூ. 9,9335 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் நீளம் 15.46 கி.மீ.
கிளாம்பாக்கத்திலிருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுவதால், வெளியூருக்குச் செல்வோர் கிளாம்பாக்கம் வரை செல்ல பேருந்து போக்குவரத்தையே நாடியுள்ளார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மெட்ரோ ரயில் திட்டம் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் பட்சத்தில் அது பல்லாயிரக்கணக்கானோருக்குப் பலனளிக்கும்.
Kilambakkam | Kilambakkam Bus Terminus | Chennai Metro Rail | CMRL | Tamil Nadu Government