அதிமுகவுக்கு ஆதரவு: அசாதுதீன் ஒவைசி

"சிஏஏ, என்பிஆர், என்சிஆர் ஆகியவற்றை எதிர்ப்பதாகவும் அதிமுக உறுதியளித்துள்ளது."
ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி (கோப்புப்படம்)
ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி (கோப்புப்படம்)
1 min read

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார்.

அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக மறுத்துவிட்டது. எதிர்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று அதிமுக உறுதியாக உள்ளது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்சிஆர்) ஆகியவற்றை எதிர்ப்பதாகவும் அதிமுக உறுதியளித்துள்ளது. எனவே, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க ஏஐஎம்ஐஎம் முடிவு செய்துள்ளது.

எங்களுடையக் கூட்டணி வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும்" என்று ஒவைசி குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கம் ஒவைசியின் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in