
இன்று சட்டப்பேரவை தொடங்கும் முன்பு சபாநாயகர் அப்பாவுவை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய செய்தியாளர் சந்திப்பில், செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தன்னைச் சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்ப்பது ஏன் என்கிற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
என்னைச் சந்திப்பதை செங்கோட்டையன் ஏன் தவிர்க்கிறார் என்று அவரிடமே கேளுங்கள். அவரிடம் கேட்டால் தான் காரணம் தெரியும். என்னைக் கேட்டால் எப்படித் தெரியும்? இங்கே நிறைய பேர் வரவில்லை. அதைப் பற்றி நீங்கள் கேட்கவில்லை. நான் என்றைக்கும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. அதிமுக சுதந்திரமாக செயல்படுகிற கட்சி. இங்கே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான். எங்களுக்கு வேறு எதிரிகள் கிடையாது என்று கூறினார்.