
மார்ச் 5 அன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அண்மையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மார்ச் 5-ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவெடுத்து 40 கட்சிகளுக்கு இன்று அழைப்பு விடுக்கவுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அந்த கூட்டத்தில் பேசவிருக்கிறோம்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மும்மொழிக் கொள்கை விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
"மார்ச் 5 அன்று நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் இருவர் கலந்துகொள்வார்கள். அவர்கள் இருவரும் அதிமுகவின் நிலைப்பாட்டை அந்தக் கூட்டத்தில் எடுத்துச் சொல்வார்கள்" என்றார்.
சீமான் விவகாரம் பற்றி பேசுகையில், "சீமான் விவகாரம் குறித்து எனக்கு முழுமையாக விவரங்கள் தெரியாது. அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைக் கொண்டு சிலர் சொல்கிறார்கள். இதில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது சரியா, தவறா என்று எனக்குத் தெரியாது. காவல் துறை சட்டரீதியாக நடந்துகொள்ள வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் இல்லாமல் காவல் துறை செயல்பட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சி யார் என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நாட்டில், ஆளும் கட்சியைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சி தான். ஆனால், சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து அதிமுகவுக்கு தான் உள்ளது. மக்கள் கொடுத்த அங்கீகாரம் அதிமுகவுக்குதான் உள்ளது. அதிமுக இன்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. 2026-ல் ஆளுங்கட்சி வரிசையில் வரும்" என்றார் அவர்.