மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் (புதுச்சேரி உள்பட) நேரடியாகப் போட்டியிடுகிறது. மீதமுள்ள 7 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. 33 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரு நாள்கள் இரு கட்டங்களாக வெளியிட்டார்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
நெடுஞ்சாலைகளை சுங்கச் சாவடிகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 3,000 உதவித் தொகை வழங்கப்படும்
நீட் தேர்வுக்குப் பதில் மாற்று தேர்வு முறை - 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை
உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும்
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்
ஆளுநர் நியமனத்தில் மாநில முதல்வரிடம் அனுமதி கேட்க வேண்டும்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வேண்டும்