
பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒற்றுமைப்படுத்தி, பாஜகவுடன் பலமான கூட்டணி அமைத்து தேர்தல் சந்திக்கவேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி கூறியதற்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், சென்னையின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் அதிமுகவுக்கு சில ஆலோசனைகள் வழங்குவதாகக் கூறி,
`புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெரும்புகழை மேடைகளில் பேசி, சுவரொட்டி மற்றும் பேனர்களில் பெரிய அளவில் முதன்மைப்படுத்தவேண்டும், பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒற்றுமைப்படுத்தவேண்டும், பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்தவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சைதை துரைசாமிக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`சும்மா இருந்த சங்கொன்று, தன்னைத் தானே ஊதிக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது! அஇஅதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தொண்டர்கள்தான்.
`நான் மட்டும்தான் எம்ஜிஆர் தொண்டன்’ என்று சொல்லிக்கொண்டு பாடம் எடுக்கும் இவர், என்றைக்காவது இந்த இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா? கழகப்பணி எனும் கடலில் எதிர்நீச்சல் அடித்து தேர்தல் என்னும் கரை சேர்பவன்தான் அதிமுக தொண்டன்.
கழகப்பணி பக்கமே தலை வைக்காமல், தேர்தல் மேகங்கள் சூழும் சமயத்தில் `நானும் அரசியலில் இருக்கிறேன்’ என்று தன் இருப்பைக் காட்டிக்கொள்ள மட்டுமே உள்ள சைதை துரைசாமி போன்றோருக்கு, இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி என்ன தெரியும்?
இன்றும் பூத் கமிட்டி வரை கழகப்பணிகளில் தொண்டர்கள் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்தி வருவதை சைதை துரைசாமி போன்ற சிறப்புத் தோற்ற அரசியல்வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இயக்கத்தால் வந்ததுதான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார்.
`அஇஅதிமுகவில் இருந்திருக்காவிட்டால் தான் யார்?’ என்ற கேள்வியை சைதை துரைசாமி கண்ணாடியைப் பார்த்து கேட்டுக்கொள்ளட்டும்.
இந்த இயக்கத்தை அழிக்க நினைத்த, நம் இதயதெய்வங்கள் இன்றும் குடியிருக்கும் கோயிலாக நாம் கருதும் நம் தலைமைக் கழகத்தை சூறையாடிய துரோகியின் பெயரை அஇஅதிமுக பெயர் கொண்ட, இரட்டை இலை சின்னம் கொண்ட லெட்டர் பேடில்குறிப்பிடதற்கே சைதை துரைசாமி வெட்கப்படவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.