
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை ஒட்டி, அவரது சமாதியில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செய்தனர்.
1972ஆம் வருடத்தில் அதிமுகவைத் தொடங்கிய எம்.ஜி.ஆர், 1977 முதல் 1987 வரை தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்தார். உடல் நலக்குறைவால் 24 டிசம்பர் 1987-ல் மறைந்த எம்.ஜி. ஆர், சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
எம்ஜிஆரின் நினைவு நாளை ஒட்டி தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டவை பின்வருமாறு,
`நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கொள்கைகளை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த பேரலை, அண்ணா விட்டுச் சென்ற திராவிடக் கனவை ஏந்தி நின்று, மக்களுக்கான இயக்கமான அதிமுகவைக் கண்டு, அனைவரும் அனைத்தும் பெறும் நல்லாட்சிக்கான இலக்கணம் வகுத்த நம் ஒப்பற்ற தலைவர், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திராவிட நாயகர், நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான இன்று, மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழும் நம் உயிர்நிகர் தலைவரின் பெரும்புகழைப் போற்றி வணங்கி, புரட்சித்தலைவர் அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திட உறுதியேற்போம்’ என்றார்.
இன்று காலை எம்ஜிஆரின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து அக்கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.