அதிமுகவிலிருந்து விலகுவேன் என எப்போது சொன்னேன்?: ஜெயக்குமார்

"யார் வீட்டு வாசலிலும் பதவிக்காக நின்றவன் ஜெயக்குமார் அல்ல."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

அதிமுகவிலிருந்து விலகுவேன் என நான் கூறியதாகச் சொல்வது பொய்ச் செய்தி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டணி குறித்து ஆளும் கூட்டணியிலிருந்து பலர் விமர்சித்து வருகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனும் அதிமுக - பாஜக கூட்டணி விமர்சித்து வருகிறார். இரு நாள்களுக்கு முன்பு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், அதிமுக தொண்டர்களுக்கே பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் விருப்பமில்லை என்கிற வகையில் ஒரு கருத்தை முன்வைத்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து பேசிய திருமாவளவன், "பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தால், நான் கட்சியிலிருந்தே வெளியேறிவிடுவேன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லக்கூடிய அளவுக்கு அதிமுகவில் மாறுபட்ட கருத்துகள் ஏற்கெனவே இருந்தன. அதையெல்லாம் மீறி எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவோடு அமர்ந்து கூட்டணி அமைந்ததற்கு சாட்சியமாக இருந்திருக்கிறார். எந்தளவுக்கு அதிமுக தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று திருமாவளவன் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், திருமாவளவன் கருத்துக்குப் பதிலளித்துள்ளார்.

"திருமாவளவன் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், கட்சியிலிருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். நான் எந்த நேரத்திலும் இதைப்போல சொல்லவில்லை. இது பொய்ச் செய்தி. இயக்கத்திலிருந்து விலகுவதாக நான் எப்போது சொன்னேன்? நான் சொல்லாத, நினைத்துக்கூட பார்க்க முடியாத செய்தி ஒன்றை வேண்டுமென்று சமூக ஊடகங்களில் மீம்ஸ் போடுவது, கார்டு போடுவது என வேலை பார்க்கிறார்கள். ஒரு வகையில் யூடியூபுக்கு என்னால் வருமானம் கிடைத்ததில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி.

எங்களுடையக் குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு திராவிடக் குடும்பம். ஒரு தன்மானத்தோடு வளர்ந்த குடும்பம். பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்களுடையக் குடும்பத்துக்குக் கிடையாது.

அதிமுக தான் என்னை அடையாளம் காட்டி அந்தஸ்தைக் கொடுத்தது. வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, இருபெரும் தெய்வங்களாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் எங்களுடையப் பயணம் நிச்சயமாகத் தொடரும். பொய்ச் செய்தியைப் பரப்பி அதில் அற்ப ஆசைகளைக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். யார் வீட்டு வாசலிலும் பதவிக்காக நின்றவன் ஜெயக்குமார் அல்ல. அண்ணா கூறியதைப்போல பதவி என்பது எனக்குக் கைக்குட்டை போன்றது. வாழ்நாள் முழுக்க உயிர் மூச்சு என்றால் அது அதிமுக தான். தீய சக்தியான கருணாநிதியை ஒழிக்க வேண்டும் என எம்ஜிஆர் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த வழியில் தான் எங்களுடைய இயக்கம் இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த வழியில் தான் நானும் பயணிப்பேன்" என்றார் ஜெயக்குமார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in