அண்ணா பல்கலை. விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அதிமுக, பாஜக கேவியட் மனு

சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலை. விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அதிமுக, பாஜக கேவியட் மனு
1 min read

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக மற்றும் பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்புடைய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் சிறப்பு விசாரணைக் குழுவையும் உயர் நீதிமன்றம் அமைத்தது.

"பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, ரூ. 25 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்கவேண்டும். மாணவியின் அடையாளத்தை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு, பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்குக் காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி படிப்பைத் தொடர அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். அவரிடம் இருந்து தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்த ஒரு கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது.

வழக்கு விசாரணை நடைபெறும்போதே அரசிடம் அனுமதி பெறாமல் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் சென்னை காவல் ஆணையர். அரசு அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளின்படி, காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஜமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா என 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கிறோம்" என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், தங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என அதிமுக சார்பில் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாஜக சார்பிலும் இந்த வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் மோகன் தாஸ் என்பவர் சார்பாக வழக்கறிஞர் ஜிஎஸ் மணி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in