
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் இன்று (ஏப்.17) கோபுர அலங்காரம் அமைக்கப்பட்டிருந்ததற்கு அதிமுகவும், பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நடப்பு நிதியாண்டின் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்.17) இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஒட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று, மலர் தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதி நினைவிடத்தில் அப்போது கோபுர அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
இதை கண்டித்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`கருணாநிதி சமாதி மேல் கோயில் கோபுரத்தை அமைத்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கத் தெரியாத திமுக அரசு. இறந்தவர் சமாதியில் அடிப்படை அறிவு உள்ள எவராவது கோபுரம் அமைப்பார்களா? உங்கள் தலைவரை மகிழ்விக்க, குடும்ப எஜமானர்களுக்கு விசுவாசம் நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா?
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றார் அண்ணா. ஆனால், அந்த கொள்கைக்கும் மதிப்பளிக்காமல், அடிப்பொடிகளை ஏவிவிட்டு கடவுள் நிந்தனைகளை செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்டவரின் புதைவிடத்தில், கோபுரத்தை வைப்பதைவிட, சமயத்திற்கும் மக்களின் கடவுள் நம்பிக்கைக்கும் இந்த அரசு செய்யக்கூடிய துரோகம் ஏதேனும் உண்டா?’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`மறைந்த கருணாநிதியின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் திமுக அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.
"பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா? சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?
அதுவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும். அந்த பிரச்னைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.