
அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்த விளக்கம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தபோது, அவரிடம் கொடுத்த கோரிக்கை மனு குறித்தும் விளக்கமளித்தார்.
"எங்களுடைய கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளன. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. இன்னும் 8 மாத காலம் உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணியில் யாரெல்லாம் உள்ளார்கள் என்பதை பத்திரிகை, ஊடகங்களை அழைத்து தெளிவாகக் குறிப்பிடுவேன்.
டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எல்லா மாவட்டங்களிலுள்ள விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயப் பிரதிநதிகள், விவசாயிகள் எங்களிடம் கோரிக்கை வைத்தார்கள். கலந்தாலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளிடம் பேசும்போது, சிபில் ஸ்கோர் தங்களுக்குப் பெரிய கஷ்டத்தைக் கொடுக்கிறது என்பதைப் பிரதான கோரிக்கையாக வைத்தார்கள். பழைய முறைப்படி நாங்கள் பயிர்க்கடன் வாங்கும் சூழலை உருவாக்கித் தாருங்கள் என்றார்கள்.
இதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வந்தபோது, அவரிடத்தில் நேரடியாகக் கோரிக்கை மனுவை வைத்தோம். அதை உடனடியாக ஏற்றுக்கொண்டு சரி செய்வதாகக் கூறினார்கள்.
நான் பிரதமரிடம் மனு கொடுத்ததைத் தெரிந்துகொண்டு, எல்லா தொடக்க வேளாண்மை வங்கிகளுக்கும் பழைய முறையிலேயே விவசாயக் கடன்களை வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நான் எல்லா கூட்டங்களிலும் பேசுகிறேன். ஆனால், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், பிரதமரிடம் மனு கொடுத்தவுடன் உடனடியாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது" என்றார் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக, பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா நிறைவு நாளில் பங்கேற்கதற்காக தூத்துக்குடியிலிருந்து திருச்சி வந்தபோது, திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அவரை வரவேற்றார்.
Edappadi Palaniswami | ADMK | ADMK Alliance | ADMK BJP Alliance | BJP Alliance | Narendra Modi | PM Modi