தமிழ்நாட்டில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
நாடு முழுக்க 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியாகி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தலை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதில் 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளில் அதிகபட்சமாக திண்டுக்கலில் மட்டும் 39 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக வடசென்னையில் 18 வாக்குச் சாவடிகள் உள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.