
கேரள மாநிலம் ஷொரனூர் பகுதியில் ரயில் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று பிற்பகல் கேரளாவின் பாலக்காட்டில் இருந்து கிளம்பி திருச்சூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்து கேரளா விரைவு ரயில். பிற்பகல் சுமார் 3 மணி அளவில் ஷொரனூர் ரயில் நிலையத்தைத் தாண்டி, பரதப்புழா ஆற்றின் மீது அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது இந்த விரைவு ரயில் நுழைந்துள்ளது.
அதே நேரத்தில், கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த துப்பரவுப் பணியாளர்களாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 நபர்கள் உள்ளிட்ட 7 நபர்கள் அந்த ரயில் பாலத்தின் மீது இருந்தபடி துப்புரவுப் பணியை மேற்கொண்டுவந்தனர். ரயில் பாலத்தின் மீது ரயில் வந்துவிட்டதைப் பார்த்த அவர்கள் அனைவரும் ஓட முயற்சி செய்துள்ளனர்.
இதில் 3 நபர்கள் தப்பித்தாலும், ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து இந்த விபத்தில் உயிரிழந்த 4 நபர்களில், 3 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேநேரம் ரயில் மோதியதில் பரதப்புழா ஆற்றில் தூக்கி வீசப்பட்டு இறந்த 4-வது நபரின் உடலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் பெய்து வரும் மழையால் பரதப்புழா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் விழுந்த உடலைத் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில் மோதியதில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்த 4 துப்புரவுப் பணியாளர்களும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.