
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் அமைப்புச் செயலாளர் வி. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 76.
வி. கருப்பசாமி 1977-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 26 வயதிலேயே சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். 1980-ல் பாளையங்கோட்டை தொகுதியில் வெற்றி கண்டார். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் முதல் அதிமுக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் கருப்பசாமி பாண்டியன். 1996-ல் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை ஜெயலலிதா இவருக்கு வழங்கினார். திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் 'கானா' என்று பிரபலமாக அழைக்கக்கூடியவர் கருப்பசாமி பாண்டியன்.
எனினும், நான்கே ஆண்டுகளில் அதிமுகவிலிருந்து விலகிய அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். திமுகவில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்தார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
2015-ல் திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட வி. கருப்பசாமி 2016-ல் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணியுடன் இணைந்து செயல்பட்டார். 2020-ல் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அவர், மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இவர் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார்.
உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
வி. கருப்பசாமி பாண்டியனின் மகன் வி.கே.பி. சங்கர் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.