ஆம்ஸ்ட்ராங் படுகொலை: மேலும் 3 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக செம்பியம் காவல் துறை மேலும் 3 பேரைக் கைது செய்துள்ளது.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ல் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முதலில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் திருவேங்கடம் என்பவர் புழல் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகியோர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இதில் மலர்கொடி மற்றும் ஹரிஹரன் வழக்கறிஞர்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அருள் என்பவரது வங்கிக் கணக்குக்கு இவர்கள் இருவரும் ரூ. 50 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்துள்ளார்கள். காவல் துறையினர் விசாரணையின்போது, இவர்கள் இருவரும் திருப்திகரமாக பதில் எதுவும் அளிக்காததால், கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் என்பவர் திமுக நிர்வாகியின் மகன். மலர்க்கொடி அதிமுகவைச் சேர்ந்தவர். ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸைச் சேர்ந்தவர்.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு பெண் தேடப்பட்டு வருவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.