கோப்புப் படம்
கோப்புப் படம்

பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோவுக்கு ஒரே பயணச்சீட்டு: டிசம்பரில் அமல்

இதற்கான செயலியை உருவாக்குவதற்கான டெண்டர் இம்மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் கோரப்பட உள்ளது.

சென்னையில் அரசு பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு திட்டம் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் அதற்கென செயலியை உருவாக்குவதற்கான டெண்டர் இம்மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் கோரப்பட உள்ளதாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் உட்பட பல போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என அனைத்திலும் மக்கள் தனி தனியாக பயணச்சீட்டு பெற்று பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவை அனைத்தும் ஒரே பயணச்சீட்டாக கொண்டுவர கூடிய வகையில் ஒரே பயணச்சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஜூன் மாதம் டெண்டரை ஒப்படைக்கும் பட்சத்தில் முதற்கட்டமாக வரும் டிசம்பரில் சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வகையில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும், 2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in