23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களுக்குத் தடை: தமிழ்நாடு அரசு

மேற்படி நாய் இனங்களை இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களுக்குத் தடை: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை உறுப்பினர் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"06.05.2024 அன்று சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கீழ்காணும் தகவல் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. 12.03.2024 தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான, பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்புப் பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வளர்ப்புப் பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டிச் செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக் கவசம் அணிந்து அழைத்துச் செல்ல வேண்டும். அந்த இணைப்புச் சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை/தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in