
ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தண்டவாளங்களைக் கடக்க முயன்று 228 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலத்துக்குள் நிகழ்ந்த விபத்துகளின் தரவுகள் இவை. மேலும் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்லும் வழக்கம் சாதாரண ஒன்றாக உள்ளது. தண்டவாளங்களைக் கடந்து செல்வது அன்றாட ஒன்றாகவே மாறிவிட்டது. இதன் விளைவாகவே ரயில் தண்டவாளங்களில் ரயில் மோதி நிகழும் விபத்துகளைத் தடுப்பது பெரும் சவாலாக உள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு உள்பட்ட இடங்களில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 228 பேர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 34 பேர் ரயில் மோதியதில் காயமடைந்துள்ளார்கள். இந்த விபத்தில் ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தவர்களின் எண்ணிக்கையும் அடக்கம்.
தெற்கு ரயில்வே தரவுகளின் படி இந்த விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்ட விபத்துகள் சென்னை மண்டலத்தில் நிகழ்ந்துள்ளன. இவற்றி பெரும்பாலான விபத்துகள் புறநகர் ரயில் தண்டவாளங்களில் நிகழ்ந்துள்ளன. சென்னை - செங்கல்பட்டு, சென்னை - அரக்கோணம், சென்னை - கும்மிடிப்பூண்டி ஆகிய புறநகர் ரயில் வழித்தடங்களில் இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
ரயில் தண்டவாளம் சார்ந்த உயிரிழப்புகளைத் தடுக்கவும், ரயில்கள் இயக்கப்படும் வேகத்தை மணிக்கு 130 கி.மீ. ஆக உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பகுதியாக, ரயில் தண்டவாளங்களை ஒட்டி தடுப்புகளை அமைக்க ஒப்பந்தப்புள்ளி விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் கூறியதாவது:
"தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மக்கள் தொடர்ச்சியாகத் தண்டவாளங்களைக் கடந்து வருகிறார்கள். குறிப்பாக, குரோம்பேட்டையில் ரயில் தண்டவாளங்கள் அதிகளவில் கடக்கப்படுகின்றன. சில இடங்களில் நடைமேம்பாலங்கள் எதிர்திசையில் இருப்பதால், மக்கள் தண்டவாளங்களைக் கடந்து செல்ல நினைக்கிறார்கள். இதற்குத் தீர்வு காண லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களை அமைக்கவுள்ளோம்" என்றார்.
Southern Railway | Railway Track | Trespassers | Railway tracks | Chennai Division |