ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்கள்: தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு!

10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே அவை சட்டமாகி நடைமுறைக்கு வந்துவிட்டன.
ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்கள்: தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு!
1 min read

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்கள் மீது அவர் முடிவெடுக்காமல் தாமதிப்பதாகக் கூறி கடந்த 2023-ல் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஆளுநரைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களும் சட்டமானதாக அறிவித்தது. இது தொடர்பாக கடந்த ஏப்.8 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது,

`ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்கள் மீது, குடியரசுத் தலைவர் எடுக்கும் எந்த ஒரு முடிவும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. இந்த மசோதாக்களை ஆளுநர் ஆண்டுக் கணக்கில் கிடப்பில்போட்டதை கருத்தில்கொண்டு, 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே அவை சட்டமாகி நடைமுறைக்கு வந்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவிக்கிறோம்.

இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அதேநேரம் ஆளுநர் மீதும், ஆளுநர் அலுவலகம் மீதும் உச்ச நீதிமன்றம் நல்மதிப்பை வைத்துள்ளது. அவர் அரசின் ஆலோசகராக மாநில அரசுடன் இணைந்து நடக்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை, தமிழ்நாடு அரசு நேற்று (ஏப்.11) வெளியிட்ட அரசிதழில் குறிப்பிட்டு, தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு, தமிழ்நாடு ஆளுநர் 18 நவம்பர் 2023 அன்று ஒப்புதல் அளித்ததாக கருதப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், தமிழக ஆளுநரால் நிலுவையில் வைக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் அனைத்தும் பின் தேதியிட்டு சட்டமானதாக அறிவிக்கப்பட்டு, அவை அமலுக்கு வந்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in