நீட் தேர்வை முன்வைத்து தேர்தல் நாடகம்: சீமான்

நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. இப்போது எதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்?
நீட் தேர்வை முன்வைத்து தேர்தல் நாடகம்: சீமான்
1 min read

நீட் தேர்வை முன்வைத்து திமுக நடத்தும் தேர்தல் நாடகத்தில் நடிக்கத் தாம் தயாராக இல்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று (ஏப்.4) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

`கச்சத்தீவு மீட்பு தொடர்பான செய்திகள் தற்போது வெளிவருகின்றன. நாங்கள் மக்கள் பிரச்னைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு எழுந்துள்ளது. இதனால் நாங்கள் வளர்ந்து வந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு திடீரென கச்சத்தீவு மீது காதல் வந்துள்ளது.

ஒன்றுக்கும் உதவாத இடம் தமிழனுக்குத் தேவை இல்லை என்றால், அதே இடம் சிங்களவனுக்கு எதற்கு? கடலுக்கு நடுவில் உள்ள தீவில் தண்ணீர் இல்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாலைவனத்திலேயே விவசாயம் செய்கிறார்கள். தோண்டினால் தண்ணீர் வரப்போகிறது.

இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்ததற்கு ஈடாக, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இலங்கையிடமிருந்து பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பெற்றுக்கொடுத்தார் என காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். அந்த நிலங்கள் எங்கு இருக்கின்றன? கச்சத்தீவுக்கு தீர்மானம் வெற்றுத் தீர்மானம். திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இப்போது ஏன் திடீர் தீர்மானம்?

நீட் தேர்வை முன்வைத்து திமுக நடத்தும் தேர்தல் நாடகத்தில் நடிக்க நான் தயாராக இல்லை. நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. எங்களால் ரத்து செய்யமுடியாது என்று தமிழக அரசும் கூறிவிட்டது. இப்போது எதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்? தேர்தல் வரும்போதுதான் நீட் பிரச்னை எழுப்பப்படுமா?

நீட் தேர்வை முதன்முதலாக யார் கொண்டு வந்தது? நீட் தேர்வுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் கருணாநிதி முரசொலியில் கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் வரும்போது அனைத்துப் பிரச்னைகளுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in