
ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பிறகு உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் புனித தலம் இன்று (மே 4) திறக்கப்பட்டதை அடுத்த, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
`சார் தம்’ என்று அழைக்கப்படும் ஹிந்துக்களின் 4 முக்கிய புனித யாத்திரை தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகியவை உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் மலைத்தொடர் மீது அமைந்திருக்கும் இந்த புனித தலங்கள், அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்.
அந்த வகையில் கடந்த ஏப். 30 அட்சய திருதியை நாளன்று பல்வேறு பூஜைகளுடன் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் நடைதிறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மே 2 அன்று கேதார்நாத் கோயில் நடைதிறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (மே 4) காலை பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு, பத்ரிநாத் கோயில் நடைதிறக்கப்பட்டது.
பத்ரிநாத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய உத்தரகண்ட் முதல் புஷ்கர் சிங் தாமி, கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
`இன்று மிகவும் மங்களகரமான நாளாகும்; கடவுள் பத்ரி விஷாலின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. புனித பூமியான உத்தரகண்டிற்கு அனைத்து பக்தர்களையும் வரவேற்கிறேன். பலவிதமான முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பிரதமர் மோடி தலைமையின் கீழ் பத்ரிநாத்திற்காக விரிவான வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’ என்றார்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் விஷ்ணு கோயிலான பத்ரிநாத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.