
தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தின்போது தமிழகத்தைச் சேர்ந்த 2,000 பக்தர்களை கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லும் திட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
ஜூலை 18, 27, ஆகஸ்ட் 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில், இந்த ஆடி மாத கட்டணமில்லா ஆன்மிக பயணம் சென்னை, ஈரோடு, கோயமுத்தூர், திருச்சி, மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இருந்து தொடங்கப்படும்.
இதில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, சென்னை (கல்லூரி சாலை மற்றும் மயிலாப்பூர்), ஈரோடு, கோயமுத்தூர், திருச்சி, மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள இணை ஆணையர் அலுவலகங்களில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கவேண்டும்.
இந்த ஆன்மிக பயணத்தில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:
1) ஆன்மிக பயணத்தில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
2) பக்தர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2,00,000-க்கு மிகாமல் இருத்தல்வேண்டும்.
3) 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
4) பக்தர்கள் ஒரு முறை மட்டுமே இந்த பயணத்தில் கலந்துகொள்ள முடியும்.
5) வயது சான்று, உடல் தகுதிக்கான மருத்துவ சான்று, வருமான வரி சான்று, இருப்பிட முகவரிக்கான சான்று, ஆதார் மற்றும் பான் கார்டு நகல்கள் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும்.