
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அஹமதாபாதைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பத் என்பவருடையக் காணொளி இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. சம்பவம் நடந்தபோது, ரிஷி பத் என்பவர் ஸிப்லைனை பயன்படுத்தியுள்ளார். இவர் இதில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது பயங்கரவாதிகள் கீழே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இவர் பேசுகையில், "எனக்கு முன்பு 9 பேர் ஸிப்லைனில் பயணம் செய்தார்கள். அப்போது ஸிப்லைனை இயக்குபவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் பயணம் செய்தபோது அவர் பேசினார். அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. எனவே, அவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றார். இதன்பிறகு தான் துப்பாக்கிச் சூடு நடந்தது. அவர் காஷ்மீரைச் சேர்ந்தவரைப்போலவே இருந்தார்.
ஸிப்லைனில் முதலில் எனக்கு எதுவும் தெரியவில்லை. 20 விநாடிகளுக்குப் பிறகு தான் பயங்கரவாதத் தாக்குதல் என்பதை நான் உணர்ந்தேன். 5-6 பேர் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன். கீழே இறங்கி குதித்து என் மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடினேன். மக்கள் ஓரிடத்தில் மறைந்திருந்ததைப் பார்த்தேன். எளிதில் கண்டுபிடிக்க முடியாத இடமாக இருந்ததால், அங்கு மறைந்துகொண்டோம்" என்றார் அவர்.
ஸிப்லைனை இயக்கியவர் பெயர் முஸாமில். இவர் தற்போது காவல் துறை வசம் உள்ளார். முஸாமில் தந்தை அப்துல் ஆஸிஸ் கூறுகையில், "முஸாமில் தற்போது காவல் துறையினர் வசம் உள்ளார். அவர் பயந்து கிடக்கிறார். அந்த நேரத்தில் அவர் அழத் தொடங்கிவிட்டார். என்னிடம் எதுவும் கூற வேண்டாம், அங்கே ஏதோ நிகழ்ந்துவிட்டது என என்னிடம் கூறினார். புயல் வந்தால்கூடத்தான் நாங்கள் அல்லாஹு அக்பர் என்று சொல்வோம். இதில் என்ன தவறு உள்ளது? அவர் ஸிப்லைனை இயக்கும் தொழிலை மட்டுமே செய்து வந்தார். வேறு எந்த வேலையும் அவர் செய்யவில்லை" என்றார்.
பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி கூறுகையில், "ஜெய்ஸ்ரீ ராம் என்று சொல்வதைப்போல முஸ்லிம்கள் அல்லாஹு அக்பர் என்று சொல்வார்கள். நாங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அல்லாஹு அக்பர் என்போம். சமூக ஊடகங்களில் விஷத்தைக் கக்குபவர்கள் மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.