
மத்திய அரசால் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் பிரீமியம் மீது விதிக்கப்பட்டும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி.
நிதின் கட்கரி எழுதிய கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு:
`நாக்பூர் டிவிஷனைச் சேர்ந்த எல்.ஐ.சி ஊழியர்கள் சங்கம் காப்பீட்டுத் துறை குறித்து ஒரு முக்கியமான கோரிக்கையை என்னிடம் வைத்தனர்.
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் பிரீமியம் மீது விதிக்கப்பட்டும் ஜிஎஸ்டி வரி குறித்து மிக முக்கியமாக என்னிடம் பேசினார்கள். ஆயுள் காப்பீடுகளின் பிரீமியம் மீது 18 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீடுகளின் பிரீமியம் மீது ஜிஎஸ்டி விதிப்பது வாழ்க்கையின் நிலையற்ற தன்மையின் மீது வரி விதிப்பதற்கு ஒப்பாகும்.
இதே போல, மருத்துவக் காப்பீடுகளின் பிரீமியம் மீது 18 % ஜிஎஸ்டி விதிப்பது, சமூகத்துக்கு முக்கியமான இதைப் போன்ற தொழில்களின் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியாகும். இதனால் மேற்கூறிய ஜிஎஸ்டி வரிகளை திரும்பப்பெறுமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், பொதுத்துறை மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு, மருத்துவக் காப்பீடு பிரீமியம் மீது வருமான வரி விதிப்பை மீண்டும் செயல்படுத்தியுள்ளது ஆகியவை குறித்து ஊழியர்கள் சங்கத்தினர் என்னிடம் கோரிக்கை எழுப்பினார்கள்.
இதனால் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் பிரீமியம் மீது விதிக்கப்பட்டும் ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறத் தாங்கள் பரிசீலிக்க வேண்டும்’.