
உத்தரப் பிரதேசத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் கற்றுத் தரப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய நிலையில், தரவுகளைத் தரத் தயாரா என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார். இதில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஹிந்தி மொழி குறித்து எழும் சர்ச்சை தொடர்பாக பேசும்போது, உத்தரப் பிரதேசத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் கற்றுத் தரப்படுவதாகக் கூறினார்.
"உத்தரப் பிரதேசத்தில் நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளைக் கற்றுத் தருகிறோம். இதனால், உத்தரப் பிரதேசம் சுருங்கிவிட்டதா என்ன?
உத்தரப் பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன. தங்களுடையக் குறுகிய அரசியல் நலன்களுக்காக மொழியை வைத்து சர்ச்சைகளை உண்டாக்குகிறார்கள்.
மொழியை வைத்து சர்ச்சையை உண்டாக்குவதன் மூலம் தங்களுடைய அரசியல் நோக்கங்களை அவர்கள் பூர்த்தி செய்யலாம். ஆனால், இளைஞர்களின் வேலைவாய்ப்பை அவர்கள் பாதிக்கிறார்கள்" என்றார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினைக் குறிப்பிடுகுறீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு, "யாராக இருந்தாலும், அவர்கள் இதைச் செய்கிறார்கள். இதனால்தான் அவர்களுடைய மாநிலங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன. தங்களுடைய அரசியல் விருப்பங்களை அடைவதற்காக உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார்கள்" என்றார் யோகி ஆதித்யநாத்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக தமிழ் கற்றுத் தரப்படுவது குறித்த தரவுகளைத் தரத் தயாரா என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
"தமிழைக் கற்றுத் தர உத்தரப் பிரதேச பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்கிற தரவுகளை உத்தரப் பிரதேச அரசு கொடுக்குமா? தமிழை மொழிப் பாடமாகத் தேர்வு செய்துள்ள மாணவர்கள் எத்தனை? தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் கட்டாயம் ஹிந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தேவை எதுவும் இல்லை. தமிழ்நாடு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் யாருக்கும், இங்கு வரும் வரை தமிழ் குறித்த புரிதல் எதுவும் கிடையாது. ஹிந்தியைத் திணிப்பதை நிறுத்துங்கள்" என்று கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.