இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றக் கோருவோம்: ஆம் ஆத்மி கட்சி

தில்லியின் அவல நிலைக்கும், தில்லியில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்ததற்கும், 2013-ல் ஆம் ஆத்மி அரசை நாங்கள் 40 நாட்கள் ஆதரித்ததே காரணம்.
இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றக் கோருவோம்: ஆம் ஆத்மி கட்சி
1 min read

கெஜ்ரிவாலை அவதூறாகப் பேசிய அஜய் மக்கான் மீது காங்கிரஸ் கட்சி 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றக் கோருவோம் என ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தில்லியின் சட்ட ஒழுங்கு மற்றும் மாசுபாடு குறைபாடு ஆகியவற்றுக்குக் காரணமாக ஆம் ஆத்மி அரசையும், மத்திய பாஜக அரசையும் குற்றம்சாட்டி, நேற்று (டிச.26) வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி.

இந்த நிகழ்வில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான அஜய் மக்கான், `ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அதிகாரத்திற்கு வந்தது, ஆனால் தில்லியில் ஜன் லோக்பாலை அமைக்கத் தவறிவிட்டது. பஞ்சாபிலும் கூட ஜன் லோக்பால் அமைக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

தில்லியை லண்டனை போல் ஆக்குவோம் என்றார் கெஜ்ரிவால், ஆனால் மாசுபட்ட நகரமாக தில்லி உருவாகியுள்ளது. கேஜ்ரிவால்தான் நாட்டின் மிகப்பெரிய மோசடி மன்னன். அதனால்தான் அவர் மீதும், மத்திய பாஜக அரசு மீதும் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம். தில்லியின் அவல நிலைக்கும், தில்லியில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்ததற்கும், 2013-ல் ஆம் ஆத்மி அரசை நாங்கள் 40 நாட்கள் ஆதரித்ததே காரணம். இது எனது தனிப்பட்ட கருத்து’ என்றார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், `காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக தில்லியில் பிரச்சாரம் செய்தார் கெஜ்ரிவால். சண்டிகரிலும் கூட அவர் பிரச்சாரம் செய்தார். நாடாளுமன்றத்தில் நடக்கும் பிரச்னைகளின்போது நாங்கள் காங்கிரஸ் உடன் நிற்கிறோம். ஆனால் கெஜ்ரிவால் மீது இளைஞர் காங்கிரஸார் புகார் கொடுக்கின்றனர் .

கேஜ்ரிவாலை ஒரு தேச விரோதி என்று விமர்சித்துள்ள அஜய் மக்கான் மீது காங்கிரஸ் கட்சி 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் இண்டியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடம் காங்கிரஸை கூட்டணியிலிருந்து விலக்கி வைக்கக் கோருவோம்’ என்றார்.

கடந்த மக்களவை தேர்தலில், தில்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால் 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in