பஹல்காம் தாக்குதல்: யார் இந்த சையது ஹுசைன் ஷா?

"பிற்பகல் 3 மணியளவில் தாக்குதல் குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது. சையது ஹுசைன் ஷாவைத் தொடர்புகொண்டோம்."
பஹல்காம் தாக்குதல்: யார் இந்த சையது ஹுசைன் ஷா?
ANI
1 min read

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் என்ற சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியா வந்துள்ள நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

2019-ல் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நிகழும் மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

மதத்தின் அடையாளத்தைக் கண்டறிந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகத் தொடக்கத்தில் தகவல் வெளியானது. உயிரிழந்தவர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் எனத் தொடக்கத்தில் செய்திகள் பரவின.

இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் சையது ஹுசைன் ஷா என்பவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது.

யார் இந்த சையது ஹுசைன் ஷா?

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குதிரையில் அழைத்துச் செல்லும் குதிரைக்காரர் சையது ஹுசைன் ஷா.

சையது ஹுசைன் ஷாவின் தாயார் கண்ணீர் மல்க கூறுகையில், "எங்கள் குடும்பத்தில் அவர் ஒருவர் தான் வருவாய் ஈட்டும் ஒரே நபர். அவர் இல்லாமல் என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை" என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

சையது ஹுசைன் ஷாவின் தந்தை சையது ஹைதர் ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அவர் பஹல்காமுக்கு வேலைக்காகச் சென்றார். எங்களுடையக் குடும்பத்தில் அவர் ஒருவர் தான் பொருள் ஈட்டுபவர். பிற்பகல் 3 மணியளவில் தாக்குதல் குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது. சையது ஹுசைன் ஷாவைத் தொடர்புகொண்டோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

பிறகு, மாலை 4.30 மணியளவில் அலைபேசி செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது எங்களுடைய அழைப்பை யாரும் ஏற்கவில்லை. காவல் நிலையம் சென்று புகாரளித்தோம்.

காவல் நிலையம் சென்ற பிறகு தான் தாக்குதலில் அவர் காயமடைந்தது பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது. அவர் வீரமரணம் அடைந்துவிட்டார். அவருடைய மரணத்துக்கு நீதி வேண்டும். அவர் ஒரு அப்பாவி. அவர் ஏன் கொல்லப்பட வேண்டும்? இதற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற சையது ஹுசைன் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in