
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நேற்று (ஏப்.22) நடத்திய கொடூரத் தாக்குதல் இரண்டு வெளிநாட்டினர் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டனர்.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட் பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது, லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த சய்ஃபுல்லா கசூரி என்றும், தாக்குதலுக்கு தலைமையேற்று நடத்தியது அசிப் ஃபௌஜி என்றும் கூறப்படுகிறது.
ஹஃபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் அரசியல் கட்சியான மில்லி முஸ்லீம் லீக்கின் தலைவராக சய்ஃபுல்லா கசூரி என்று அறியப்படும் காலீத் செயல்படுகிறார் என்று அமெரிக்க அரசின் கருவூலத்துறை கடந்த 2017-ல் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பெஷாவர் பகுதிக்கு சய்ஃபுல்லா கசூரி தலைமை தாங்குவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 5 ஆகஸ்ட் 2019 அன்று, அன்றைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து லடாக் பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டது, இரண்டு பகுதிகளும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, `தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்’ என்ற தீவிரவாத அமைப்பு உருவாகியுள்ளது. காஷ்மீரை மையமாக வைத்து செயல்படும் இந்த தீவிரவாத அமைப்பிற்கு மத ரீதியிலான சாயலை வெளிப்படுத்தாமல், பூர்வீக தோற்றத்தை அளிக்கவே இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு தொடர்ச்சியாக ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட் அச்சுறுத்தல்களை விடுத்து வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இதை `பயங்கரவாத அமைப்பாக’ அறிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்கள், ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட் அமைப்பால் நடத்தப்பட்டவையே.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை அளித்த தகவலின்படி, 2022-ம் ஆண்டில் பாதுகாப்புப் படையினரால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் பெரும்பாலோர் ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் தீவிரவாத செயல்பாடுகளில் இந்த அமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் எல்லைதாண்டிய தீவிரவாத செயல்பாடுகளுக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு எப்போதும் இருந்து வந்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு, கடந்த பிப்ரவரி 2019-ல் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது புல்வாமாவில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலே தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட பெரிய தாக்குதலாக இருந்தது. இதில் சுமார் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது 26 பொதுமக்கள் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (ஏப்.22) பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலில் 4-5 தீவிரவாதிகள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் எல்லைதாண்டி வந்து அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடுருவியதாக தெரிவிக்கப்படுகிறது.