
மாதவி பூரி புச் ஓய்வுபெறுவதை ஒட்டி, இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் புதிய தலைவராக மத்திய நிதி அமைச்சகத்தின் செயலர் துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1 மார்ச் 2022 முதல் செபியின் தலைவராக இருக்கும் மாதவி புச் இன்றுடன் (பிப்.28) ஓய்வுபெறவுள்ளார். இதை ஒட்டி, புதிய செபி தலைவராக மத்திய நிதி அமைச்சகத்தின் செயலர் துஹின் காந்த பாண்டேவை நியமித்து நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் வரை அந்த பொறுப்பில் அவர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் செயலர் பொறுப்பில் இருக்கும் துஹின் காந்த பாண்டே, 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டு, ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு நடுத்தரவர்க்கத்தினருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
மேலும், 1961 வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக, புதிய வருமான வரி சட்டத்தை உருவாக்குவதிலும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் செயலராக நீண்ட காலம் பணியாற்றி, ஏர் இந்தியாவை மீண்டும் டாடா நிறுவனத்திற்கு விற்றதிலும் இவர் பங்கு முக்கியமானது.
கடந்தாண்டு ஆகஸ்டில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் தொடர்புடைய சில வெளிநாட்டு நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதவி புச்சும், அவரது கணவர் தாவல் புச்சும் முதலீடு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வகையில், செபியின் தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்ட விவகாரம், முக்கியத்துவம் பெறுகிறது.