மத்திய பிரதேசத்தில் வரும் கல்வியாண்டில் மகிழ்ச்சி பாடத்திட்டம் அறிமுகம்: அம்சங்கள் என்ன?

இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் கடந்த 2 வருடங்களாக 450 பள்ளிகளில் செயல்படுத்தினோம்.
மத்திய பிரதேசத்தில் வரும் கல்வியாண்டில் மகிழ்ச்சி பாடத்திட்டம் அறிமுகம்: அம்சங்கள் என்ன?
ANI
1 min read

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு, வரும் கல்வி ஆண்டில் இருந்து மகிழ்ச்சி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் மகிழ்ச்சி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மகிழ்ச்சி பாடத்திட்டத்திற்கென முறையான தேர்வுகள் நடைபெறப்போவது இல்லை. மாறாக, கதைசொல்லாடல், குழு விவாதங்கள், நினைவாற்றல் பயிற்சிகள் போன்றவற்றின் மூலம் செயல்முறை சார்ந்த கற்றலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அம்மாநிலத்தின் மகிழ்ச்சி துறையின் தலைவர் சத்ய பிரகாஷ் ஆர்யா, `இந்த முயற்சி மாணவர்களுக்கு இடையே நல்வாழ்வு, நெறிமுறை சிந்தனைகள் மற்றும் முழுமையான வாழ்க்கை முறை போன்றவற்றை போதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் கடந்த 2 வருடங்களாக 450 பள்ளிகளில் செயல்படுத்தினோம். தற்போது 9,000 பள்ளிகளில் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

இது தொடர்பாக மேலும் பேசிய ஆர்யா, `நன்றியுணர்வு, ஆரோக்கியம் மற்றும் தன்னை அறிதல் ஆகியவற்றை மாணவர்களிடம் கற்பிக்கவுள்ளோம்; மகிழ்ச்சி என்பது வெளிப்புற சாதனைகளிலிருந்து மட்டும் ஏற்படுவது அல்ல, அது ஒருவரது உள்ளிருந்து வருவது என்பதைக் காண மாணவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம்’ என்றார்.

பொருள்களை ஈட்டுவதற்கு அப்பால் மகிழ்ச்சியைப் புரிந்துகொள்வது, சுய விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் செயல்முறை சார்ந்த கற்றல் மூலம் குடும்பத்துடனும், சமூகத்துடனும், இயற்கையுடனும் நல்லிணக்கத்தைப் பேணுவது போன்றவற்றை வலியுறுத்தும் நோக்கில் இந்த பாடத்திட்டம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மகிழ்ச்சி வகுப்புகளை எடுக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு மே மாதத்தில் மட்டும் இதற்காக 3,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in