
சட்டப்பூர்வமாக விசா மூலம் அமெரிக்காவில் குடியேறிய பிற நாட்டு மக்கள், அது தொடர்பான அடையாள அட்டையை இனி எந்நேரமும் தங்களுடன் வைத்திருக்கவேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
`படையெடுப்பில் இருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல்’ – என்ற பெயரில் அமெரிக்க அரசு நேற்று (ஏப்.11) அமல்படுத்தியுள்ள புதிய உத்தரவின் கீழ் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.
புதிய விதிகளின்படி,
1) 14 வயதிற்கு மேற்பட்டு, 30 அல்லது அதற்கு அதிகமாக நாள்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள், அமெரிக்க அரசிடம் புதிய படிவத்தை (G-325R) பூர்த்தி செய்து வழங்கவேண்டும்.
2) ஏப்ரல் 11-ம் தேதிக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு வருகை தருபவர்கள், 30 நாட்களுக்குள் தங்களின் வருகையைப் பதிவு செய்யவேண்டும். தவறும் பட்சத்தில், அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
3) முகவரி மாற்றம் குறித்து, 10 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் அறிவிக்கவேண்டும். தவறும் பட்சத்தில் 5,000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
4) அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் 14 வயதை எட்டிய 30 நாள்களுக்குள் அரசு அலுவலகத்தில் மீண்டும் பதிவுசெய்து, கைரேகைகளை சமர்ப்பிக்கவேண்டும்.
அதேநேரம், விசா மூலம் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசித்து வருபவர்கள், இந்த புதிய படிவத்தை பூர்த்தி செய்யத்தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹெச்-ஒன்.பி விசாவைப் பெருமளவு பெற்று அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவர்கள் புதிய படிவத்தை சமர்ப்பிக்கவேண்டியதில்லை.
ஆனால், விசா பெற்று அமெரிக்காவில் வசிக்கும் பிற நாட்டு மக்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் பிற அவசியமான ஆவணங்களை இனி எந்நேரமும் தங்களுடன் வைத்திருக்கவேண்டும், அவற்றை அதிகாரிகள் கேட்கும்போது காண்பிக்கவேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.