
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய்க்கு, மரண தண்டனை வழங்கக்கோரி மேல்முறையீடு செய்துள்ளது மேற்கு வங்க மாநில அரசு.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ல் சடலமாக மீட்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டது உடற்கூராய்வில் தெரியவந்தது.
இந்தக் கொலை தொடர்பாக, மேற்கு வங்க காவல்துறையில் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கின் புலன் விசாரணையை ஆரம்பத்தில் கொல்கத்தா காவல்துறை விசாரித்தாலும், கல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கின் விசாரணையை சிபிஐ மேற்கொண்டது.
கடந்த 2024 அக்டோபரில் சிபிஐ சார்பில் கொல்கத்தாவின் சியல்டா குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிறைவு பெற்றது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜன.18-ல் சஞ்சய் ராயை குற்றவாளியாக அறிவித்தார் சியல்டா நீதிபதி அனிபர் தாஸ். இதனை அடுத்து, இந்த வழக்கில் சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று (ஜன.20) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவர் குடும்பத்திற்கு மேற்கு வங்க அரசு ரூ. 17 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.
குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படாததால், அரசு வழங்கும் இழப்பீட்டை ஏற்கப்போவதில்லை. எனப் பெண் பயிற்சி மருத்துவரின் தந்தை அறிவித்தார்.
இந்நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடுமாறு, சியல்டா குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்று (ஜன.21) கொல்கத்தா உயிர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது மேற்கு வங்க அரசு.