மே.வ. வன்முறையில் 3 பேர் உயிரிழப்பு: மத்திய துணை ராணுவப் படைகளைக் குவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வக்ஃபு திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.
மே.வ. வன்முறையில் 3 பேர் உயிரிழப்பு: மத்திய துணை ராணுவப் படைகளைக் குவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ANI
1 min read

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மத்திய அரசால் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வன்முறை வெடித்துள்ளது. வன்முறையில் தந்தை, மகன் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஜாஃப்ராபாதில் சமூக விரோதிகளால் வீட்டிலிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் காயமடைந்து இருந்திருக்கிறார்கள்.

வன்முறை தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜாவெத் ஷமிம் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், காவல் துறை தரப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா இல்லையா என்பது பற்றி அவர் தெளிவுபடுத்தவில்லை. குண்டு காயத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய துணை ராணுவப் படைகளைக் குவிக்க மாநில அரசு கோரிக்கை எழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மேற்கு வங்க அரசைக் கேட்டுக்கொண்டார். இதை ஏற்காததால், வேறு வழியின்றி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடுவதாக சுவேந்து அதிகாரி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்ற விடுமுறை நாளிலும் சிறப்பு அமர்வில் வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் மத்திய துணை ராணுவப் படைகளைக் குவிக்க உத்தரவிட்டது.

வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, வக்ஃபு திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.

வன்முறை குறித்து மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமார் கூறியதாவது:

"நேற்று முதல் வகுப்புவாத பிரச்னையால் ஜாங்கிபூரில் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. எவ்விதமான சட்டவிரோத செயல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது. நிலைமையை மிகக் கடுமையாகக் கையாண்டு வருகிறோம். மனித உயிர்களைக் காப்பது எங்களுடையப் பொறுப்பு. யாரும் வதந்திகளைப் பரப்பக் கூடாது. வதந்திகளுக்கு யாரும் செவி கொடுக்க வேண்டாம். சட்டத்தைக் கையிலெடுத்தால், காவல் துறையினர் கடுமையான நடவடிக்கையை எடுப்பார்கள். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in