
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொல்கத்தா மாநகரின் புராபஸார் பகுதியின் மதன்மோகன் தெருவில் ரிதுராஜ் என்ற 6 மாடி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 8 மணி அளவில் இந்த ஹோட்டலின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ பரவியுள்ளது.
தீ விபத்தால், 13 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், உடல் கருகியும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர், தீ விபத்தில் இருந்து தப்பிக்க எண்ணி மாடியில் இருந்து கீழே குதித்ததில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். தீ விபத்து நடைபெற்றபோது, ஹோட்டலில் 88 பேர் தங்கியிருந்ததாகவும், 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டம் ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு, அவரது மனைவி மதுமிதா, மகள் தியா, மகன் ரிதன், மாமனார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
தீ விபத்தின்போது ஹோட்டல் அறையில் இருந்த முத்துகிருஷ்ணனும், அவரது பேரக்குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோர், முச்சுத்திணறி உடல்கருகி உயிரிழந்தனர். இரவு உணவு வாங்குவதற்காக பிரபுவும், மதுமிதாவும் வெளியே சென்றிருந்ததால் உயிர் பிழைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா தகவலளித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.