பிரஜ்வல் ரேவண்ணாவைக் கட்சியிலிருந்து நீக்க முடிவு: குமாரசாமி

"நாளை நடைபெறவுள்ள முக்கியமான கூட்டத்தில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படவுள்ளது"
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரஜ்வல் ரேவண்ணாவைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்துவிட்டதாக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மூத்த தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. தொடர்புடைய ஏராளமான ஆபாசக் காணொலிகள் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தக் காணொலி விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முன்பு பணிபுரிந்த பெண் பணியாளர் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடக காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கில் தேவெகௌடாவின் மகன் ஹெச்டி ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் முதல் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ளன. இதனால், இந்த விவகாரம் பாஜகவையும் பாதித்துள்ளது.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஷிவமோகாவில் இதுகுறித்து அவர் கூறுகையில், "மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கியமான கூட்டம் ஹூப்ளியில் நாளை நடைபெறுகிறது. எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய ஏற்கெனவே முடிவு செய்துவிட்டோம். நாளை நடைபெறவுள்ள முக்கியமான கூட்டத்தில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படவுள்ளது" என்றார் குமாரசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in